பதிவு செய்த நாள்
02
செப்
2015
10:09
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்., 11 ல் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கவுள்ளது. முருகனின் ஆறு படை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித்திருவிழா 12 நாட்கள் நடக்கும்.
இத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். பின் கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது. இதனை தொடர்ந்து 5.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,சிறப்பு பூஜையும், மஹா தீபாரதனையும் நடந்தது . மாலை 4 மணிக்கு அப்பர் சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் வீதியுலா நடந்தது. திருவிழா நாட்களில் தினமும், காலை,மாலை பல்வேறு வாகனங்களில், பல்வேறு கோலங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
செப்., 11 ல் காலை 6 முதல் 6.30 க்குள் சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். பின்னர் பக்தர்கள் தேர் வடம் பிடிக்கின்றனர். செப்., 13 ல் மாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் மஞ்சள் நீராட்டு விழா கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தில் உள்ள அரங்கில் திருவிழா நாட்களில் தினமும், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டி மன்றம், பரதநாட்டியம் போன்ற நிழகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், ஆகியோர் செய்து வருகின்றனர்.