பதிவு செய்த நாள்
02
செப்
2015
11:09
திருவள்ளூர்: மகா சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், நேற்று, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜை நடந்தது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் சங்கடகர சதுர்த்தி, மகா சங்கடகர சதுர்த்தி என, அழைக்கப்படுகிறது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், பஞ்சேஷ்டி அடுத்த, நத்தம் கிராமத்தில் உள்ள, காரிய சித்தி கணபதிக்கு, சங்கட நிவாரண ஹோமம், ககார சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து, விசேஷ அபிஷேகம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில் உள்ள, காரிய சித்தி விநாயகர் கோவிலில், மகா சங்கடகர சதுர்த்தி ஹோமம், நேற்று, காலை 8:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை நடந்தது. இதே போல், ஜெயா நகர், மகாவல்லப கணபதி கோவில், தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வரசக்தி விநாயகர் சன்னிதி, ஆயில் மில் வெற்றி விநாயகர் கோவில், திருப்பாச்சூர், வாசீஸ்வர சுவாமி கோவில், விநாயகர் சபையில் உள்ள, 11 விநாயகர்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.