பதிவு செய்த நாள்
02
செப்
2015
11:09
காளையார்கோவில்: மூன்று ஈஸ்வரர் சன்னதியும் ஒரே கோயிலில் வீற்றிருக்கும் சிறப்பு கொண்ட காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (செப்டம்பர் 3) காலை 7:45 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். சிவகங்கையில் இருந்து 18 கி.மீ., தொலைவிலுள்ள "திருக் கானப்பேர் எனும் சிறப்பு பெற்ற நகரம் காளையார்கோவில். பிரசித்தி பெற்ற சிவாலயம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மூன்று சிவன்களை ஒரே கோயிலில் பார்ப்பது இங்கு மட்டுமே. சவுந்திரவல்லி அம்பாள் சமேத சோமேஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் சமேத காளீஸ்வரர், மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் சன்னதி ஆகிய மூன்று ஈஸ்வரர் சன்னதியும் ஒரே கோயிலில் வீற்றிருப்பது தனிச்சிறப்பு.
புனரமைப்பு பணி: இக்கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என தீர்மானித்தனர். உபய தாரர்கள் வழங்கிய நிதியில் கோயில் புனரமைப்பு பணிகள் நடந்தன. ராஜகோபுரங்கள், பிற மூலஸ்தான விமானம் மற்றும் தெப்பக்குளம் உட்பட பரிவார சுவாமிகளின் கோபுரங்கள் அனைத்தும் புனரமைத்துள்ளனர்.
கும்பாபிஷேக பூஜை: நாளை (செப்டம்பர் 3) காலை 7:45க்கு மேல் 11 மணிக்குள் அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபி ஷேக விழா துவங்குகிறது. தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், தனபூஜை நடக்கும். கோயில் முன் சொர்ணகாளீஸ்வரருக்கு 9 குண்டங்கள் உட்பட யாகசாலையில் அமைத்துள்ள 35 குண்டங்களில் யாகசாலை பூஜை நடக்கும். செப்டம்பர் 9ம் தேதி காலை 4:30 மணிக்கு 6ம்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கும். காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாட்டிற்கு பின் காலை 10 மணிக்கு 9 நிலை ராஜகோபுரம், 5 நிலை ராஜகோபுரம், காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் மூலஸ்தான விமானம் உட்பட 25 விமான கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடை பெறும். அன்று மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடக்கும். செப்டம்பர் 10ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம், தீபாராதனை, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெறும். கோயில் புனரமைப்பு பணியை சிவகங்கை தேவஸ்தான பரம் பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண் காணிப்பாளர் கணபதிராம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கும்பாபிஷேக சர்வ சாதக பணிகளை கோயில் ஸ்தானிகர் ஆர்.காளீஸ்வரக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.