பதிவு செய்த நாள்
02
செப்
2015
12:09
பெய்ருட்:சிரியாவின், பல்மைரா நகரில், 2,000 ஆண்டு பழமையான கோவில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது, செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதை, ஐ.நா., உறுதி செய்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றி, தனி இஸ்லாம் நாட்டை உருவாக்கியுள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தம் வசமுள்ள பகுதிகளில், பழமை வாய்ந்த புராதனச் சின்னங்களை அழித்து வருகின்றனர். சிரியாவில், பல்மைரா நகரில், 2,000 ஆண்டுக்கு முன், ரோமப்பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பெல் கோவிலை, பயங்கரவாதிகள், இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக, கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, பாரம்பரிய சின்னம், அழிக்கப்பட்டது, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், செயற்கைக் கோள் மூலம், எடுக்கப்பட்ட புகைப்படம், பல்மைரா நகரில், பெல் கோவில் தரைமட்டமாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கோட்பாட்டின்படி, இஸ்லாம் உருவானதற்கு முந்தைய அனைத்து மதச் சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும். எனவே, பல்மைரா நகரில் எஞ்சியுள்ள பிற, பண்டைய நினைவுச் சின்னங்களையும், பயங்கரவாதிகள் அழித்து விடுவர் என, அஞ்சப்படுகிறது.