பதிவு செய்த நாள்
03
செப்
2015
11:09
திருப்பூர்: "வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 500 ஏக்கர் நிலங்களில் மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை நிறைவேற்றும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் மரக்கன்று நட்டு, பராமரிக்கும் திட்டம், 23ல் துவக்கப்பட்டது. வனத்துறை, ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறது. வெற்றி அமைப்பு, "தினமலர் நாளிதழின் இம்முயற்சியில், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்துள்ளது. கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், கோவில் திருப்பணி, தேர் திருப்பணி, பூஜை, யாகங்களுக்கு பயன்படும் வகையில் பயனுள்ள மரங்களான, இலுப்பை, வேம்பு, மகா கனி, நாவல், பூவரசு ஆகிய மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்ட துவக்க விழா, விஜயாபுரம் பிரிவு அருகே, நல்லூர் விசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 3.18 ஏக்கர் நிலத்தில் நேற்று துவங்கியது. அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, உதவி ஆணையர் ஆனந்த், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், செயல் அலுவலர்கள் வெற்றி செல்வன், அழகேசன், சங்கர சுந்தரேசன், நாகராஜ், பசவராஜன், சிவராம சூரியன் மற்றும் வனத்துறையினர், பெம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று, 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. "நவகிரி அப்பேரல்ஸ் நிறுவனத்தினர், குழாய், சொட்டு நீர் பாசன வசதி செய்து, பராமரிப்பதாக உறுதியளித்தனர். இதே கோவிலுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம், தெக்கலூர் செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக என்.எச்., ரோட்டிலுள்ள, 7 ஏக்கர் நிலம், உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 30 ஏக்கர், அல்லாளபுரம் கோவிலுக்கு சொந்தமான, 100 ஏக்கர், சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான, 24 ஏக்கர், தாராபுரம் கொங்கநாயக்கன் பாளையத்திலுள்ள, 14 ஏக்கர் நிலங்கள் என, 500 ஏக்கர் நிலங்களில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் வரை, நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணை ஆணையர் இளம்பரிதி கூறுகையில், ""கோவில்களுக்கு சொந்தமான, காலியான நிலங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. அங்கு, பயனுள்ள மரக்கன்று நட்டு பராமரிக்கப்படும், என்றார்.