பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
கோவை: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலை தன்னகத்தே கொண்டுள்ளது சூலக்கல் கிராமம். இப்பஞ்சாயத்துக்கு உட்பட்டு, நாராயணசெட்டிபாளையம், சென்னியூர், பெரியாக்கவுண்டனுார், நல்லியன்குட்டை கிராமங்கள் உள்ளன. கண்நோய், அம்மை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சூலக்கல் அம்மனை தரிசித்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சிறு கிராமம்தான் என்றாலும், இரண்டு பொதுக்கழிப்பிடங்களை பஞ்சாயத்து கட்டியுள்ளது. பொதுமக்களும் இக்கழிப்பிடத்தை பயன்படுத்துவதால், சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. கோவிலுக்கு வருபவர்களுக்காக கோவில் வளாகத்திலேயே கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், வெளியூர்களில் இருந்து வருபவர்கள், கோவிலுக்கு அருகே தங்குவதற்கு இடமில்லை. பஞ்சாயத்து நிர்வாகமோ, அறநிலையத்துறையோ தங்கும் விடுதிகளை கட்டித்தரலாம்.
தேர்வலம் வரும் வீதி குண்டும் குழியுமாக உள்ளது. இதுபற்றி கோவில் நிர்வாகிகள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். தலைவரும் தேரோட்டத்துக்கு முன்பாக தேர்வலப்பாதை அமைத்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக, தெரிவித்தனர். கோவில் அருகிலேயே நடுநிலைப்பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம், தனியார் வங்கி, கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. கிராமத்தில் தண்ணீர் வசதி, சாக்கடை வசதிகளில் சங்கடமில்லை. அதேபோல கிணத்துக்கடவு, வடக்கிபாளையம், பொள்ளாச்சியில் இருந்து பஸ் வசதி உள்ளது. பெரும்பாலும், இங்குள்ளவர்கள் விவசாயம் மேற்கொண்டுள்ளனர். நீண்ட நாட்களாக கிராமத்தில் நடைபெற்று வந்த கயிறு திரிக்கும் தொழில், கால மாற்றத்தால் காணாமல் போய்விட்டது. ஆனாலும், தென்னை ஓலைகளில் இருந்து தடுக்கு பின்னும் தொழில், பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளது. சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துடன் தேரோட்டமும் விரைவில் நடக்கவுள்ளது. இதற்காக 27 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் தயாரிப்பு பணி வேகமாக நடக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, கோவில் வளாகத்துக்குள் சினிமா படப்படிப்புக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதனாலும், கோவில் வருமானம் மட்டுமன்றி எங்களது வியாபாரமும் குறைந்துள்ளதாக, சுற்றுப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.