பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், முதல்கட்ட கும்பாபிஷேகத்துக்கான, யாக சாலைகள் அமைக்கும் பணி நிறைவடைந்து, அவை அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 43 உபசன்னதிகள் மற்றும் ,11 கோபுரங்களுக்கு, வரும், 9ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான, யாகசாலைகள் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. மேலும், கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ள கோபுரங்களில் மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், முதல்கட்டமாக நடைபெறும் கும்பாபிஷேகத்துக்காக, ஆகம விதிப்படி, ஒன்பது யாக குண்டம், ஐந்து மேடைகளுடன் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜை, வரும், 7ம் தேதி துவங்குகிறது. நான்கு கால யாக சாலை பூஜைகள் வரும், 8ம் தேதி இரவு வரை நடைபெற உள்ளது. கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தை சுற்றி வண்ண திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகளுக்கான பணிகள், ஓரிரு தினங்களில் நிறைவடைய உள்ளது. யாகசாலை பூஜைக்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து, கோவில் யானை ஆண்டாள் மீது, புனித நீர் எடுத்து வரப்படும். யாகசாலை பூஜைகளுக்கு பின், வரும், 9ம் தேதி காலை, 5.40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.