பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
விருத்தாசலம்: கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தேவையான அகல் விளக்குகள், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உற்பத்தி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. இங்கு, பியூஸ் கேரியர், சாமி சிலைகள், அகல் விளக்குகள் உட்பட 100க்கும் மேற்பட்ட வகைகளில் செராமிக் மற்றும் டெரக்கோட்டாவிலான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, அனைத்து மாவட்ட வியாபாரிகளும் இங்கு முகாமிட்டு, அகல் விளக்குகளை வாங்கிச் செல்வர். அதே போல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தீபாவளி கொண்டாட்டத்திற்கும் இங்கிருந்து அகல் விளக்குகள் வாங்கிச் செல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக, செராமிக் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. சங்கு மாடல் அகல், குத்து விளக்கு, மாங்காய் விளக்கு, 9 திரிக்கு மத்தியில் விநாயகர், 5,7,9 திரி விளக்கு, மடக்கு, துளசி மாடம், குந்து சட்டி உட்பட 60 வகையான விளக்குகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. செராமிக் உற்பத்தியாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ‘விருத்தாசலம் தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் அகல் விளக்குகள், தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் வாங்கிச் செல்வர். கடந்தாண்டைவிட ஏராளமான புது ரக அகல்விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 35 பைசா முதல் 20 ரூபாய் வரை அகல் விளக்குகள் உள்ளன. விலைவாசி உயர்வால் வரும் தீபாவளிக்கு முன் அகல் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.