Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஏகநாதர்
ஏகநாதர்!
எழுத்தின் அளவு:
ஏகநாதர்!

பதிவு செய்த நாள்

18 செப்
2015
03:09

தமிழகத்தில் சைவர்களுக்கு கோயில் என்றால் சிதம்பரம். வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம். அதுபோல மகாராஷ்டிராவில் கோயில் என்றால் பண்டரிபுரமே; தெய்வம் பாண்டுரங்க விட்டலனே. நமது நாயன்மார்கள், ஆழ்வார்களைப்போல, பாண்டுரங்க பக்தர்களும் பலருண்டு. அவர்களில் ஒருவர் ஏகநாதர். இவரது சிறப்பென்னவென்றால், பகவான் பாண்டுரங்கனே இவரது வீட்டில் பணியாளராக சேவை செய்தார்.

பானுதாச ருக்வேதி என்பவர் மகாராஷ்டிர அந்தணர். ஔரங்காபாத் அருகேயுள்ள பைடன் என்னுமிடத்தில் சக ஆண்டு 1370- ல் பிறந்தவர். இதற்கு பிரதிஷ்டாபுரம் என்று பெயர். வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் வசித்த இடம். பானுதாசர் சிறுவயதில் படிப்பில் மிக மந்தமாக இருந்தார் எனவே தந்தையின் ஏச்சுக்கு அடிக்கடி ஆளாக வேண்டியிருந்தது. ஒருநாள் மனம் வெறுத்து அருகேயிருந்த சூரிய நாராயணன் கோயிலில் அன்ன ஆகாரமின்றி இரண்டு நாட்கள் அமர்ந்து விட்டார். மூன்றாம் நாள் ஒளிப்பிரகாசமாக வந்த ஒரு பெரியவர், சிறுவனிடம் பாலைக் கொடுத்து அருந்தச் சொன்னார். அவ்வாறு ஐந்து நாட்கள் பாலருந்தியவர் ஞானசூரியனாக வெளியே வந்தார். பகவத் பக்தி, பஜனை, ப்ரவசனம் என்று நாட்கள் நகர்ந்தன.

இளைஞனானதும்ஆடைகள் விற்கும் தொழில்புரிந்தார். நியாயமாக விற்றதால் நன்கு வியாபாரமானது. ஒருநாள் வாரச்சந்தையில் விற்பனையை முடித்துவிட்டுத் திரும்பிய அவர், அன்றிரவு ஒரு சத்திரத்தில் தங்கினார். அப்போது பஜனை சத்தம் கேட்கவே, சக வியாபாரிகளிடம் உடமைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கு சென்று விட்டார். அவர்களோ பானுதாசர்மீது பொறாமை கொண்டவர்கள். எனவே அவரது குதிரையை அவிழ்த்துவிட்டனர். ஆடைப்பொதியை வேறிடத்தில் ஒளித்தனர். பணத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு படுத்துவிட்டனர். அப்போது அங்குவந்த கொள்ளைக்கூட்டத்தினர். அவர்களை அடித்து, இருந்து பொருட்களை அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர்.

பஜனை முடிந்து பானுதாசர் திரும்பிவர, எதிரில் வந்த ஒருவர் ‘இதோ உன் குதிரையும் பணமும்’ என்று ஒப்படைத்துவிட்டு, துணிப்பொதி மறைத்து வைக்கப்பட்ட இடத்தையும் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார். பானுதாசருக்கு எதுவும் புரியவில்லை. அவர் சத்திரத்துக்கு வந்ததும் சக வியாபாரிகள் நடந்ததையெல்லாம் கூற, பகவானே வந்தார் என்பதையறிந்து மெய்சிலிர்த்துப் போனார். இன்றைக்கு பண்டரிபுரத்திலுள்ள விட்டலன், இந்த பானுதாசரால் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டவரே. அதாவது, விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதிக்கு வந்தபோது, விட்டலனின் அழகில் மயங்கினார். அவரை எடுத்துச்சென்று தமது பிரதேசத்தில் அனகோந்தி என்னுமிடத்தில் (தற்போதைய ஹம்பி என்பர்) பிரதிஷ்டை செய்துவிட்டார். பண்டரிபுரத்திலுள்ளவர்கள் பானுதாசரிடம் விட்டலன் இல்லாக்குறையைச் சொல்லி மனம் வருந்த, பானுதாசர் ஹம்பி சென்றார். ஒரு திருவிளையாடல் மூலம் இறைவன் பானுதாசரின் பெருமையை அரசனுக்கு உணர்த்த, நெகிழ்ந்த கிருஷ்ணதேவராயர் விட்டலன் விக்ரகத்தை திரும்பக் கொடுத்ததோடு, பிரதிஷ்டை வைபவத்திலும் கலந்து கொணடார். அந்த தினம் கார்த்திகை (கைசிக) ஏகாதசி, தற்போதும் கோலாகலமாக விழா நடக்கும் நாள்.

அந்த பானுதாசரின் மகன் சக்ரபாணி. பேரன் சூரிய நாராயணன். அவர் மனைவி ருக்மிணி. இந்த தம்பதிக்குப் பிறந்தவரே ஏகநாதர். இவர் பிறந்தது சக ஆண்டு 1455, மூல நட்சத்திரம். இளமையிலேயே கல்வியிலும் பக்தியிலும் சிறந்து விளங்கினார். அதில் முழுமைபெற ஒரு குருவைத் தேடி ஏங்கினார். ஒருநாள் தியானத்தின்போது, தேவ்கட்டில் உள்ள ஜனார்த்தனரை அணுகு என்று வாக்கு கேட்டது. அப்படியே தேடிச்சென்று அவர் பாதம் பணிந்தார். குரு ஜனார்த்தனர் தத்தாத்ரேய உபாசகர்; அவர் தரிசனமும் பெற்றவர் வீரத்திலும் சிறந்தவர். தன் பாதம் பணிந்த ஏகநாதரின் தகுதியைப் புரிந்துகொண்ட ஜனார்த்தனர் அவரை பரிவுடன் சீடனாக ஏற்றுக்கொண்டார். அவரிடம் ஆறு ஆண்டுகள் தங்கி தன் பக்தி ஞானத்தை வளர்த்துக் கொண்டார் ஏகநாதர். குருவின் அருளால் தத்தாத்ரேயர் தரிசனமும் பெற்றார்.

குரு ஜனார்த்தனர், தத்தாத்ரேய குரு, பாண்டுரங்க விட்டலன் யாவரும் ஒருவரே என்றுணர்ந்தார் ஏகநாதர். மராட்டிய மொழியில் பாவார்த்த ராமாயணம், ஏகநாத் பாகவதம் போன்ற நூல்களை இயற்றினார். இவருக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மகான் ஞானேஸ்வரர். அவர் ஆலந்தி என்னுமிடத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் ஏகநாதரின் கனவில் தோன்றி, மரத்தின் வேர் வளர்ந்து என் உடலில் குத்துகிறது. அதனை அப்புறப்படுத்து என்றார். விடிந்ததும் ஆலந்தி சென்ற ஏகநாதர் சமாதியைத் திறந்துபார்க்க, மரத்தின் வேர் ஞானேஸ்வரரின் உடலில் குத்தியபடி இருந்தது. அதை அப்புறப்படுத்தி மீண்டும் சமாதியை மூடினார் ஏகநாதர். இது 1505- ஆம் வருடம் ஆடி மாதத்தில் நிகழ்ந்ததென்பர்.

பின்னர் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள், மதுரா, கோகுலம், பிருந்தாவனம் உள்ளிட்ட பல தலங்களையும் தரிசித்துவந்தார். அந்த நிலையில், குரு ஜனார்த்தனரின் ஆக்ஞைப்படி கிரிஜா எனும் குணவதியை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும், கங்கா, லீலா எனும் இரண்டு மகள்களும் பிறந்தனர். குடும்பமே பக்தியில் திளைத்தது. மிலேச்சனுக்கு சிரார்த்த உணவளித்தது, இறக்கும் தறுவாயிலிருந்த கழுதையைப் பிழைக்க வைத்தது. வேசிக்கும் கள்வர்களுக்கும் அருளியது, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் காட்சியளித்தது என்று ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் நன்மை செய்துபல அற்புதங்களை நிகழ்த்தினார்.

அவ்வாறு இருக்கும்போது ஒருநாள் பிராமணச் சிறுவன் ஒருவன் ஏகநாதரின் வீட்டுக்கு வந்தான். அவன் ஏகநாதரை வணங்கி, “உங்களது பக்தி, பரோபகாரம், சாதிபேதம் பாராது அனைவருக்கும் உதவும் தன்மை போன்ற உயர்குணங்களை அறிந்தேன். தங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன். எனக்கு உற்றார் - உறவினர் எவருமில்லை. நான் செய்யும் பணிக்கு கூலி எதுவும் வேண்டாம். பசிக்கு சற்று அன்னமிட்டால் போதும் என்றான். சிறுவனின் வினயத்தைக் கண்டுவியந்த ஏகநாதர், அங்கேயே தங்கிக்கொள்ள அனுமதி தந்தார். சிறுவன் அங்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் உதவியாக இருந்தான் எதுவும் வேண்டுமென்று கேட்கவில்லை மனம் கோணவில்லை. அங்கு வரும் சாதுக்களும் அந்த சிறுவனின் தொண்டைக்கண்டு வியந்து அவன்மீது அன்பு செலுத்தினர் கண்டியா என்னும் அந்த சிறுவன் இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பணி செய்தான்.

இந்த நிலையில் துவாரகையில், மதன் என்பர் துவாரகாதீசன்மீது மிகுந்த பக்திபூண்டு வணங்கிவந்தார். கண்ணனின் தரிசனம் காண பலவாறு இறைஞ்சிவந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கண்ணன், நான் பைடனில் ஏகநாதர் எனும் பக்தன் வீட்டில் கண்டியா என்னும் பெயரில் இருக்கிறேன். அங்கு சென்றால் என்னை தரிசிக்கலாம் என்றருளினார். பிரமித்த மதன் உடனே புறப்பட்டு பைடன் வந்தார். கோதாவரியில் நீராடினார். அப்போது ஆற்றில் நீர் எடுப்பதற்காக காவடிபோல் இரு குடங்களை தோளில் வைத்துக்கொண்டு வந்த ஒரு சிறுவனைப் பார்த்தார். அவனை அழைத்து ஏகநாதர் வீடு எங்கே என்று கேட்க, அவன் நீர் எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துச் சென்று ஏகநாதரின் இல்லத்தைக் காட்டினான். பின்னர் நீரை உள்ளே கொண்டு சென்றான்.

ஏகநாதரைப் பார்த்ததும் மதனின் மேனி சிலிர்த்தது. இவர் வீட்டிலல்லவா கண்ணன் இருக்கிறான். எத்தனை பாக்கியம் செய்தவர் என்று நெகிழந்து, “சுவாமி, நான் துவாரகையிலிருந்து வருகிறேன். கண்ணன் கண்டியா எனும் பெயரில் தங்கள் வீட்டில் இருப்பதாக என் கனவில் வந்து கூறினார். அந்த கண்டியாவை தரிசிக்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார். அதைக்கேட்ட ஏகநாதரின் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. “துவாரகைக் கண்ணன் இங்குதான் இருக்கிறானா இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நான் அவனை அறிந்துகொள்ளவில்லையே!” என்று தன்னிரக்கத்தில் உருக, அங்கே காவடியுடன் வந்த சிறுவன் அவ்விருவருக்கும் கண்ணனாகக் காட்சிதந்தான். பின் ஏகநாதரின் பூஜையறையில் சென்று மறைந்தான். இந்த சம்பவம், பலரும் எழுதியுள்ள ஏகநாதர் சரித்திரத்திலும், ஏகநாதர் பாடல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. பக்தனுக்கு பகவானைத் தவிர வேறொன்றிலும் நாட்டமில்லை. அதுபோல பகவானுக்கும் பக்தனைத் தவிர வேறெதிலும் விருப்பமில்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.

சக வருடம் 1521, சித்திரை ஆறாம் நாள் ஏகநாதர் பரந்தாமனின் பாதக்கமலங்களை அடைந்தார். இதே ஆறாம் நாளில் மேலும் நான்கு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஏகநாதரின் குரு ஜனார்த்தனர் பிறந்தது. ஜனார்த்தனருக்கு தத்தாத்ரேயரின் முதல் தரிசனம். ஜனார்த்தனர் ஏகநாதரை சீடராக ஏற்றது. ஜனார்த்தனர் பரமபதம் அடைந்தது ஆகிய நிகழ்வுகளே அவை. குரு, இறைவன் எல்லாம் ஒன்றே என்பதை ஏகநாதரின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar