ஆத்தூரில் பாழடைந்த நிலையில் பழமையான விசாலாட்சி கோயில்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2015 11:10
ஆத்தூர்: ஆத்தூரில் பாழடைந்த நிலையில் உள்ள காசி விசாலாட்சி விஸ்வநாதர் கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விசாலாட்சி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் விசாலாட்சி, விசுவநாதருக்கு தனித்தனியாக கருவறைகள் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் இவை மிகவும் சேதமடைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் கருவறை கோபுரங்களை மட்டும் சீரமைக்க அறநிலைய துறை திட்டமிட்டது. இதற்காக பாலாலய பூஜையும் நடந்தது. மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கருவறைகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில் கோபுரங்களை சீரமைப்பதால் பயனில்லை. கருவறையை சீரமைத்த பின்பே கோபுரங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து நிறுத்தப்பட்ட சீரமைப்பு பணிகள் பல ஆண்டுகளாகியும் தொடரப்படவில்லை. பொதுவாக பாலாலய பூஜைகள் முடிந்ததும் ஆறு மாத காலத்திற்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பல ஆண்டுகளாகியும் திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அறநிலைய துறை செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கருவறைகள் மற்றும் கோபுரங்களை சீரமைப்பதற்கு நிதியுதவி மற்றும் நன்கொடை வழங்க பலரும் தயாராக உள்ளனர். ஆயினும் அறநிலைய துறை இதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் நிதியுதவியையும் பெற்று திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.