பதிவு செய்த நாள்
09
அக்
2015
11:10
விருத்தாசலம்: நவராத்திரி பண்டிகைக்கு கொலு பொம்மைகள் வாங்க, வெளிமாநில வியாபாரிகள் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டைக்குப் படையெடுத்து வருகின்றனர். நவராத்திரி விழாவில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களை வீட்டில் கொலு வைத்து 9 நாட்கள் சிறப்பாக வழிபடுவர். தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் 13ம் தேதி முதல் நவராத்திரி திருவிழா துவங்குகிறது. இதற்காக விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள 200க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களில் கடந்த இரண்டு மாதங்களாக நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதில், யானை, பஞ்சமுக விநாயகர், வல்லப கணபதி, 20 குபேரன் பொம்மைகள் கொண்ட செட், தசவதாரம் செட், சத்தியநாராயண செட், அஷ்டலட்சுமி, ராமர் பட்டாபிஷேகம், கல்யாண செட், பொய்க்கால் குதிரை, காமதேனு, காய்த்திரி, மீனாட்சி சுந்தரேசர், ராதை கண்ணன், லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், இலைவடிவ விநாயகர் உட்பட 90க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட கொலு பொம்மைகள் உற்பத்தி செய்து, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில், பண மூட்டைகளுடன் மாட்டு வண்டியில் குபேரன் வருவது, சமயபுரம் மாரியம்மன் பொம்மைகள் இந்தாண்டு புதிய வரவாகும். 10 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை செராமிக் பொம்மைகள் கிடைக்கின்றன. கொலு பொம்மைகளை வாங்குவதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் விருத்தாசலத்திற்குப் படையெடுத்து வருகின்றனர். பொது மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.