பதிவு செய்த நாள்
10
அக்
2015
10:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதி சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இப்பகுதி முதற்கட்டமாக தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இக்கோயில் மற்றும் சுற்றுப் பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நெரிசலை குறைத்தல், பகுதி மேம்பாடு திட்டத்தை முதல் திட்டமாக வாக்கெடுப்பில் மாநகராட்சி வெளியிட்டது. அதை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோயில் பகுதிகள், வண்டியூர் கண்மாய் பகுதிகள், காந்திமியூசியம் சுற்றுப் பகுதிகள், மாரியம்மன் தெப்பக்குளம், புட்டுத்தோப்பு வைகை குடியிருப்பு பகுதிகள், விளாங்குடி ஆனையூர் பகுதி மேம்பாடு என தனிப்பகுதிகளாக 7 திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.பொதுவான திட்டங்களாக மாநகராட்சி பகுதிகளில் முழுமையான குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட
10 திட்டங்கள் மக்களின் வாக்கெடுப்பிற்கு கொண்டுவரப்பட்டன.செப்., 28 முதல் அக்., 4 வரை நடந்த வாக்கெடுப்பில் 73,572 மக்கள் பங்கேற்றனர். இவை அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, இத்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை தாக்கல் செய்யும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்துள்ள வாக்குகளின் அடிப்படையிலும், மாநகராட்சி அதிகாரிகள் கருத்துகள், எதிர்காலத்திற்கு அத்தியாவசியமான திட்டங்கள் என்ற மதிப்பீடுகளின் அடிப்படையிலும் எந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வாக்கெடுப்பு பட்டியலில் உள்ள அனைத்து திட்டங்களுமே மதுரைக்கு மிகவும் தேவையானவை. அதனால் இதில் எந்த பணிகள் நிறைவேற்ற உத்தரவுகள் வந்தாலும், அதை சிறப்பாக செயல்படுத்துவோம். மதுரைக்கு அதிக அளவில் வெளியூர்களில் இருந்து மக்கள், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளுக்கு வருவதால் அப்பகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பயன் அனைத்து பகுதியினருக்கும் கிடைத்து போன்று இருக்கும். புராதனமிக்க நகர் பட்டியலிலும் இது இடம்பெற்றுள்ளதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதற்கட்ட பணிக்கான தேர்வில் மீனாட்சி அம்மன் கோயில் பகுதிசார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம், என்றனர்.