பதிவு செய்த நாள்
10
அக்
2015
10:10
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், இந்த மாத உண்டியல் வருமானம், 50 லட்சம் ரூபாயை தாண்டியது. கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் உதவி ஆணையர் கார்த்திக், இந்து சமய அறநிலைத்துறையின் கோவை மாவட்ட உதவி ஆணையர் ஆனந்த், பொள்ளாச்சி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. மொத்தம் உள்ள,16 நிரந்தர உண்டியல்களில் வந்த காணிக்கை, 35 லட்சத்து, 49 ஆயிரத்து, 348 ரூபாய். தட்டுக்காணிக்கை உண்டியலில், 14 லட்சத்து, 75 ஆயிரத்து, 293 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மாசாணியம்மன் கோவில் இந்த மாத உண்டியல் வருமானமாக, 50 லட்சத்து, 72 ஆயிரத்து, 837 ஆகும். அம்மனுக்கு காணிக்கையாக, 274 கிராம் தங்கம் மற்றும் 407 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், சலவநாயக்கனூரை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர்.