திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2015 05:10
விருதுநகர்: திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருத்தங்கல் பெருமாள் கோயில் ‘தங்காலமலை’ மீது அமைந்துள்ளது. மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான ‘நின்ற நாராயணப்பெருமாள்’ மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு. இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு. இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியன தல தீர்த்தங்களாக உள்ளன.