பதிவு செய்த நாள்
13
அக்
2015
12:10
மடத்துக்குளம்: ஆதிமனிதர்களால் அச்சத்தால் தொடங்கிய புற்று வழிபாடு, பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தனக்கு கட்டுப்படாத, தன்னை பிரமிக்க வைத்த, தனக்கு வாழ்வாதாரம் வழங்கிய நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு, ஆகியவற்றை வணங்க தொடங்கினான் மனிதன். இவற்றை காக்கும் கடவுளின் உருவங்களாக உருவகப்படுத்தினான். இதற்காக பூஜைகள், வினோத சடங்குகள் நடத்தப்பட்டன.
இதற்கு அடுத்ததாக, பயத்தை உண்டாக்கியது பாம்புகள். இவை கடித்தால் மனிதன் இறந்தததைக்கண்ட சக மனிதன். பாம்புகளை கண்டால் மிரட்சியடைய தொடங்கினான். இந்த அச்சம், பாம்பை வணங்கும்படி செய்ததோடு, பாம்புகளுக்கு பலவிதமான பூஜைகள் செய்து வழிபட ஆரம்பித்தான். பாம்புகள் வசிக்கும் இடங்களான புற்றுகளை தேடிச்சென்று வழிபட்டான். காடுகளில் வசிக்கும் பாம்புகள் உணவுக்காக மனிதர் வாழ்விடங்களுக்கு வருவதாக நினைத்து, கோழிமுட்டை, பால், கோழிகுஞ்சுகளை புற்றுகளின் முன் வைத்தான். இதைச்சாப்பிடும் பாம்புகள், பசியாறிய பின், தங்களை தேடி வராது எனவும் நம்பினான். இது ஆதிகால புற்றுவழிபாட்டின் தொடக்கமாகும். இந்த முறையில் வழிபாட்டு பொருளாக மாறிய பாம்புகள் மீது மனிதனுக்கு பயம் கலந்த மரியாதை ஏற்பட்டது. பின்னாளில் உருவகங்கள் பெற்ற கடவுள்களின் புராணக்கதைகளுக்குள் பாம்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன.
பாம்புகளில் வணங்குதலுக்குரிய இடத்திலுள்ளது நாகபாம்புகள் தான். இவற்றின் புற்றுகளை தான் அதிகளவில் மக்கள் வழிபடுகின்றனர். சிலர் நாகபாம்புகளை வழிபட்டு, அதை தங்களின் குலதெய்வங்களாக்கி கொண்டதோடு, தங்களை நாகர்இனமாகவும் அறிவித்து வாழ்ந்துள்ளதாக வரலாற்று தகவல்கள் உள்ளன. இதன்பின்பு, வந்தஆண்டுகளில் நாககன்னிகை, நாகதேவதை, நாகதோஷ கதைகளும் மக்களிடையே வலம் வந்தன. இப்படி, பலவகையான கோணத்தில் பாம்புகள் பார்க்கப்பட்டாலும், இந்த புற்றுவழிபாடு காலத்தால் மிகவும் தொன்மையானது. பலஆயிரம் ஆண்டுகள் கடந்தும், இந்த வழிபாடு கிராமங்கள் மற்றும் நகரங்களில் கூட இன்றும் பின்பற்றப்படுகிறது. இவ்வழிபாட்டில், பெண்கள் மிகவும் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.
புற்றுகள் உள்ள பகுதியில் சுத்தம் செய்தும், மஞ்சள், சந்தனம் தெளித்தும், மல்லிகை பூக்களைத்துாவியும், பத்தி, சாம்பிராணி புகையிட்டும், முட்டை, பால் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். பலகோவில் வளாகங்களில் இந்த புற்றுகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் சோமனுாருக்கு அருகில் ‘வாழத்தோட்டத்து அய்யன் கோவில்’ என அழைக்கப்படுகிற பாம்புக்கு தனிக்கோவில் உள்ளது.
மடத்துக்குளம் பகுதியிலுள்ளவர்கள் கூறுகையில், ‘விஷம் என்பது மனிதனை அழிப்பது. விஷம் போன்ற குணங்களும், கேடுகளும், பாம்புகளும் தங்களை தாக்கக்கூடாது எனக்கூறி புற்றுகளை வழிபடுவது, இந்த வழிபாட்டின் உட்பொருளாகும். இன்றும், இந்த வழிபாடு பாரம்பரியமாக தொடர்கிறது’ என்றனர்.