பதிவு செய்த நாள்
29
அக்
2015
10:10
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம், திரிபுரசுந்தரி அம்மனுக்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும் மரத்தேர் பணி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் சைவ திருத்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில், நான்கு வேதங்கள் மலைக்குன்றுகளாக அமைந்து, அவற்றின் உச்சியில் சுயம்புவாக சொக்கநாயகி அம்மனுடன் இறைவன் வீற்றிருந்து, அருளாசி வழங்கி வருகிறார்.
32 அடி உயரம் : இக்கோவிலின் திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை பக்தவத்சலேஸ்வரர் கோவில், சதுரங்கப்பட்டினம் சாலையில் உள்ளது. இங்கு சித்திரை பிரம்மோற்சவ, 7ம் நாளில் பஞ்சமூர்த்திகளுடனும், ஆடிப்பூர உற்சவ, 7ம் நாளில் தனித்தும், திரிபுரசுந்தரி அம்மன் தேரில் வீதியுலா செல்வார்.சில ஆண்டுகளுக்கு முன், அம்மனின் திருத்தேர் பழுதாகி, பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டு, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், அம்மனுக்கு புதிய மரத்தேர் உருவாக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. தொண்டை மண்டல பகுதி வடிவமைப்பில், 32 அடி உயரம்; சதுர பீடம் (10 அடி நீளம், 10 அடி அகலம்); முருகர், விநாயகர், அம்மனின் பல்வேறு உருவங்கள் உட்பட, 32 சிற்பங்கள்; மரச்சக்கரங்கள் என, மூன்று அடுக்கு மரத்தேரை, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்க, கடந்த ஆண்டில் அரசு 10 லட்சம் ரூபாய் வழங்கியது.
2 மாதங்களில்..: அதனுடன், 20 லட்சம் ரூபாய் நன்கொடை பெறவும் முடிவெடுத்து, பக்தவத்சலேஸ்வரர் கோவில் அருகில், ஒன்பது மாதங்களுக்கு முன் பணி துவக்கப்பட்டது. தேரின் பீடம் மட்டுமே தயாரான நிலையில், போதிய நிதியின்றி, சில மாதங்களாக இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன; எஞ்சியுள்ள பணிகளுக்கும் தேவையான மரத்தை, நன்கொடையாக பெற ஏற்பாடு செய்துள்ளோம்; இரண்டு மாதங்களில், புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெறும் என்றனர்.