பண்டிகைகள், திருவிழாக்கள், மனிதனின் இயந்திர வாழ்க்கைக்கு வடிகாலாக அமைந்து, மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. உறவுகளுக்கு இடையே மன நெருக்கம் பலப்படுகிறது. அத்துடன், மக்களிடையே ஒற்றுமையும், பரந்த மனப்பான்மை யும், விருந்தோம்பும் பண்பும் வளரும்; நட்பு வட்டாரம் பெருகும். வாழ்வில் ஏற்படும் விரக்தியுணர்வுகள் குறைந்து, புத்துணர்ச்சி ஏற்படும். விழாக்களால், பக்தியுணர்வு பெருகுவதுடன், வீடு, வாசல் சுத்தமடையும். பண்பாடுகள், கலாசாரங்கள் பேணப்படும். சிறு தொழில்கள், கைத்தொழில்கள் சிறந்தோங்கும்; வியாபாரம் பெருகும். மக்களிடையே பணப்புழக்கம் ஏற்படும். அத்துடன், பாரம்பரிய பண்பாடுகள் பாதுகாக்கப்படுவதுடன், சீதோஷ்ண நிலைகளின் தாக்குதல்களை சமாளிக்கவும், திருவிழாக்கள் உதவுகின்றன.