பதிவு செய்த நாள்
06
நவ
2015
02:11
தீபாவளிக்கு வரும் விருந்தினர் களுக்கு இனிப்பு, கார வகைகளை தட்டில் வைத்து கொடுத்து பயமுறுத்தாமல், பாக்கெட் செய்து கொடுக்கலாம். தேவைப்பட்டால், அவர்கள் சாப்பிட்டுக் கொள்வர்; இல்லாவிட்டால், அவர்கள் கிளம்பும் போது கையில் கொடுத்தும் அனுப்பலாம். தீபாவளியன்று இனிப்பு, காரம் என்று, ஹெவியாக இருக்கும். அதனால், அன்றைய சமையலில் மிளகு, சீரகம் மற்றும் இஞ்சி அதிகம் சேர்த்து எண்ணெய் மற்றும் தேங்காயை குறைத்துக் கொள்ளவும். விருந்து, பேலன்ஸ்டாக இருக்கும்.
உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீருடன், சிறிது வினிகரை கலந்து, பூஜைக்கான பித்தளை பாத்திரங்களை அழுத்தித் தேய்த்தால், அவை நன்கு பளிச்சிடும்.
தீபாவளியன்று, அதிகாலையிலும், மாலையிலும், வீட்டின் முன்புற வாசற்படியில் இரு அகல் தீபங்களை ஏற்றவும். தொடர்ந்து தினமும் இதைச் செய்தால், நம் வீட்டில் மகாலட்சுமி என்றும் குடியிருப்பாள் என்பது நம்பிக்கை. எண்ணெய் ஸ்நானம் செய்யும் போது, சீயக்காய் து?ளுடன் ஒரு தேக்கரண்டி ஷாம்பூ கலந்து தேய்த்துக் குளித்தால், தலைமுடியில் உள்ள எண்ணெய் பிசுக்கு உடனே நீங்கி விடும்.
பண்டிகையன்று அறுசுவை உணவும், இனிப்புகளும் உண்பதால், நம் மனம் மட்டும் திருப்தியடையும். இதையே அனாதை ஆஸ்ரமத்தில் உள்ளவர்களின் ஒருவேளை உணவிற்கு செலவு செய்தால், பலரது வயிறும், மனமும் திருப்தியடையும்.
பண்டிகையன்று புதிய ஆடை அணிவதற்கு முன், மஞ்சள் வைத்து பின் உடுத்துகிறோம். அந்த மஞ்சளை உட்பக்கம் உள்ள, பிராண்ட் லேபிளில் வைத்தால், மஞ்சள் வைத்த இடம் வெளியே தெரியாது.
தீபாவளி முடிந்ததும், நம் வீட்டின் மொட்டை மாடியில் நிறைய ராக்கெட்டுகள் மற்றும் ஊசிப் பட்டாசுகள் வந்து விழுந்திருக்கும். இவைகள், மழை நீர் சேகரிப்பு, பைப்புகளில் சென்று அடைக்க வாய்ப்புள்ளதால், அந்த இடத்தை உடனே சுத்தம் செய்துவிட வேண்டும்.
பட்சணம் செய்யும் போது, கையில் சுடு எண்ணெய் பட்டு விட்டால், உடனே, இட்லி மாவில் சிறிது எடுத்து அந்த இடத்தில் தடவினால், குணம் தெரியும்.
தீபாவளி அன்று பூஜைக்கான தேங்காய், பூ, பழம் வெற்றிலை மற்றும் அதற்கான பொருட்கள், நாம் உடுத்தப் போகும் புத்தாடைகள் ஆகியவற்றை, முதல் நாளே எடுத்து தயாராக வைத்திருந்தால், அதிகாலையில் டென்ஷன் இராது.