சபரிமலை: சபரிமலையில் தொடர்ச்சியாக தினமும் மாலையில் கொட்டி தீர்க்கும் மழையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சபரிமலையில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி தரிசனம் நடத்தி வருகின்றனர்.கார்த்திகை முதல் நாள் மாலை ஆறு மணிக்கு மழை பெய்தது. தொடக்கத்தில் சாரலாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து இரவு கொட்டி தீர்த்தது. மலையேறி களைப்பில் வந்த பக்தர்கள் தங்க இடம் இல்லாமல் தவித்தனர். இந்நிலையில் நேற்றும் அதே நேரத்தில் மழை பெய்தது. இதனால் பக்தர்கள் தங்கும் இடத்துக்காக அலைந்தனர். பொதுவாக சபரிமலையில் திறந்த வெளியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவது வழக்கம். அது முடியாமல் போனதால் இரவு முழுவதும் கட்டிடங்களில் ஓரங்களில் நின்று கொண்டிருந்தனர். மழை வரும் போது பக்தர்கள் தங்குவதற்கு கூடுதல் ஷெட்டுகள் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர். பம்பையில் வெள்ள அபாயம்: சபரிமலையில் நேற்று இரவும் பலத்த மழை பெய்தது. இதனால் பம்பையில் நீர் வரத்து அதிகரித்தது. பம்பை நதிக்கரையில் திருவேணியில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவது வழக்கம். திடீர் என்று பெய்த பெருமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் இணைந்து கார்களை கயிற்றால் கட்டி மரத்தில் கட்டினர். இதை தொடர்ந்து சன்னிதானத்தில் ஒலிபெருக்கி மூலம் திருவேணியில் பார்க்கிங் செய்த பக்தர்கள் உடனடியாக பம்பைக்கு செல்லும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பக்தர்கள் குளிக்கவும் இரவு தடை விதிக்கப்பட்டது.