பதிவு செய்த நாள்
23
நவ
2015
11:11
சபரிமலை: பம்பை ஆறு, மாசுபடுத்துவதை தடுக்க ஆற்றின் கரையில் ஆடை சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தடை விதிப்பு: பம்பை ஆறு அசுத்தம் ஆவதை தடுக்க, பக்தர்கள் உடுத்தியிருந்த ஆடைகளை போடுவதற்கு, கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மீறுபவர்களுக்கு ஒன்றரை முதல், ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்; இதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என, மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மூன்று நாட்களாக, தினமும், 10 முதல், 25 பேர் ஆடைகளை ஆற்றுக்குள் போட்டதற்காக பிடிக்கப்பட்டனர். அவர்கள், வெளிமாநிலத்தவர்கள் என்பதால் எச்சரித்து தண்டனையின்றி விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, பக்தர்கள் போட விரும்பும் ஆடைகளை சேமிக்க, பம்பை நதிக்கரையில் புதிதாக தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆடைகளை செலுத்த விரும்பும் பக்தர்கள், இவற்றில் போடலாம். இது தொடர்பாக, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என, ஆறு மொழிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
கேமராக்கள்:பம்பையில், வெள்ளம் மற்றும் பேரிடர் சமயங்களில் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க, 35 லட்சம் ரூபாய் செலவில் அவசரகால உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்த, அமைச்சர் அடூர்பிரகாஷ் கூறியதாவது: சபரிமலை, பம்பை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் கட்டுப்பாடு அவசர கால உதவி மையத்தில் இருக்கும். நானும், பத்தணந்திட்டா கலெக்டரும், எங்கள் இடத்திலிருந்து, சபரிமலை நிலவரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும். இதற்காக, நான்கு ஜூனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரத்துக்கு ஒரு அதிகாரி இங்கு பணியில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.