பதிவு செய்த நாள்
24
நவ
2015
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மஹாதீபம் ஏற்ற பயன்படுத்தப்பட உள்ள கொப்பரைக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, 8ம் நாள் விழா நடந்தது. அதில், பஞ்சமூர்த்திகள், குதிரை வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4மணிக்கு, தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, நாளை (25ம் தேதி) நடக்கிறது. அதை முன்னிட்டு, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்து, தயார் நிலையில் உள்ளது. மஹாதீபம் ஏற்றப்படும் கொப்பரை, நேற்று மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, கோவில் யானை ருக்கு, கொப்பரையை துதிக்கையால் வணங்கியது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர். இதையடுத்து, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு, தீப கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது. தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட உள்ள, 1,000 மீட்டர் காடா துணி, திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டு, அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கொப்பரையில் ஊற்றுவதற்காக, 3,500 கிலோ நெய், ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் செலுத்தும் நெய் காணிக்கையை பெறுவதற்கு கோவில் நிர்வாகம் தனி கவுண்டரை கோவிலில் அமைத்துள்ளது. தீப திருவிழாவிவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், நாளை உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தீப திருவிழாவிவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் கோபுரம், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, காண்பதற்கு கண் கொள்ளா காட்சியளிக்கிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.