பதிவு செய்த நாள்
24
நவ
2015
10:11
வாரணாசி: பன்னிரு ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அரைகுறை ஆடையில் வரும் வெளிநாட்டு பெண்களுக்கு, உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், பன்னிரு ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, தினமும், 3,000 வெளிநாட்டினர் உட்பட, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில தினங்களாக, இந்தக் கோவிலுக்கு, அரைக்கால் சட்டை, முக்கால் சட்டை, குட்டைப் பாவாடை அணிந்து வரும், வெளிநாட்டு பெண்களுக்கு உள்நாட்டு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், கோவிலுக்கு வரும் வெளிநாட்டு பெண்களுக்கு இலவசமாக புடவை வழங்கவும், உடை மாற்றும் அறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்து திரும்பி வரும் போது, மீண்டும் தங்களுடைய உடையை மாற்றிக் கொண்டு, புடவையை அவர்கள் திருப்பி அளிக்க வேண்டும். விரும்பினால், கோவில் நிர்வாகத்தின் அனுமதியுடன், அந்தப் புடவையை அவர்கள் எடுத்துச் செல்லலாம். உள்நாட்டு பக்தர்களுக்கும், விரைவில் உடை கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என, கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரி பி.என்.திவிவேதி தெரிவித்துள்ளார்.