கோவை: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, கோவையின் பல்வேறு பகுதிகளிலும் விளக்குகள் விற்பனை களை கட்டியது.கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் விழா, தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவர். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். கோவிலின் முன் வாழை மரம் நட்டு, தென்னோலைகளால் அதை சுற்றி அடைத்து, சொக்கப்பனைக்கு தீயிட்டு, சிவபெருமான் ஜோதியாக தோன்றிய காட்சியை நினைவு கூர்வர். வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து, அறியாமை எனும் இருளை போக்க ஒளி வெள்ளத்தில் நிரப்புவர். இதற்காக மண்ணால் ஆன விளக்குகளை பயன்படுத்துவது வழக்கம். கோவை பூமார்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. மண்ணால் ஆன விளக்குகள் ஒரு ரூபாய்க்கும், பீங்கான் விளக்குகள் ஐந்து ரூபாய்க்கும், மெழுகுனால் ஆன விளக்குகள் பாக்கெட், 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.