பதிவு செய்த நாள்
25
நவ
2015
11:11
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை மீது, கார்த்திகை மஹாதீபம் இன்று ஏற்றப்படுகிறது. இதற்காக, 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை பொருத்தும் பணி நேற்று நிறைவடைந்தது.
ஓசூரின் மையப்பகுதியில் உள்ள மலை மீது, 1,000 ஆண்டு பழமையான சந்திரசூடேஸ்வரர் மரகதாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுயம்பு வடிவில் சிவபெருமான் அருள் பாலிக்கிறார். ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் போன்ற, மூன்று மாநில மக்கள், இக்கோவிலுக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேரோட்டமும், கார்த்திகை மாதம் மஹாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், இந்த கோவிலில் சிறப்பாக நடப்பது வழக்கம். பத்து ஆண்டுகளாக கோவில் விமான தளத்தில், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில், கார்த்திகை மஹாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. இந்த ஆண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்றப்படும் மஹாதீபம் போல், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலிலும் ஏற்ற வேண்டும் என, கோவில் கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதற்காக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒத்துழைப்புடன், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை வாங்கப்பட்டுள்ளது. அதில், இன்று (நவ. 25) மாலை, 6 மணிக்கு கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் மஹா தீபத்திற்கு எண்ணெய், நெய் ஆகியவற்றை எடுத்து சென்று ஊற்றுவதற்கு வசதியாக, விமான தளத்திற்கு செல்ல, இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கார்த்திகை மஹா தீபத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை, 6 மணிக்கு கோவில் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள கொப்பரையில் மஹாதீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. கார்த்திகை மஹாதீப கொப்பரையை கோவில் விமான தளத்தில் பொறுத்தும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று மாலை, 1,000 லிட்டர் கொப்பரை விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இரும்பால் அமைக்கப்பட்ட மேடையில் பொருத்தப்பட்டது. இன்று (நவ. 25) ஏற்றப்படும் மஹாதீபம், தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு எரியும், என, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் தெரிவித்தார்.