பதிவு செய்த நாள்
25
நவ
2015
12:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை, ஸ்ரீ சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் தயாரான புதிய மரத்தேரின் தேரோட்டம் நடந்தது.
தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில், பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள், அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டுமலை கோயிலாகும். முருகப்பெருமான், தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து இத்தலத்தில் உபதேசம் செய்து, சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால் இங்கு முருகப்பெருமான், சுவாமிநாதசுவாமி என போற்றப்படுகிறார் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருபுகழிலும் பாடல் பெற்றது இத்தலம் என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆனால் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டு இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக கொடியேற்றம் மற்றும் சுவாமி திருவீதியுலா நடத்தப்படவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்த பிறகு வரும் முதல் திருக்கார்த்திகை திருவிழா இதுவாகும், இன்று அதிகாலை முதற்கொண்டே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை 2 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, மூலவருக்கு தங்ககவசம், வைரவேல் சாத்தப்பட்டு விசேஷ மலர் அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது. அதுமுதல் ஆயிரக்கணக்காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும் தீபங்கள் ஏற்றியும் வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரவு 9 மணி அளவில் திருக்கார்த்திகை தீபக்காட்சியை யொட்டி மலைகோயிலின் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் 15 அடி நீளம், 15 அடி அகலம் அலங்கரிக்கப்பட்ட நிலையில் சுமார் 60 உயரமும் கொண்ட புதிய மரத்தேரில் 60 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதன்முறையாக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருத்தேருக்கு எழுந்தருள ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வடம் பிடித்து இழுக்க திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.