மதுரை: மதுரை மீனாட்சி கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று லட்ச தீப தரிசனம் நடந்தது.கோபுரங்கள் மின்னொளியில் ஜொலித்தன. பொற்றாமரைக்குளம், ஆடி வீதிகள், கோயில் மேல்தளம், ஆயிரம்கால் மண்டபம், அம்மன், சுவாமி சன்னதி போன்ற பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்பட்டது. சர்வ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினார்.கோயிலிலிருந்து பஞ்ச மூர்த்திகள், பிரியாவிடையுடன் சுவாமி ஊர்வலம் எழுகடல் தெரு வழியாக நடந்தது. கீழமாசிவீதி தேர் முட்டி வந்ததும் பெரிய தேருக்கு அருகில் சுவாமியும், சிறிய தேருக்கு அருகில் அம்மனும் எழுந்தருளினர். பூஜைகள், தீபாராதனைகள் முடிந்ததும் இரவு 7 மணிக்கு சொக்கப்பனை எரிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.