சதுரகிரியில் வெள்ளம்: பவுர்ணமி வழிபாடுக்கு அனுமதி மறுப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2015 10:11
வத்திராயிருப்பு:சதுரகிரிமலையில் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், பவுர்ணமி வழிபாட்டிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.சதுரகிரி மலையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கமுடியாமல் வெள்ளத்தில் சிக்கினர். இதை தொடர்ந்து மலைக்கு பக்தர்கள் செல்ல மதுரை, விருதுநகர் கலெக்டர்கள் தடை விதித்தனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மட்டும் தலா 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கினர். அதன்படி பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, வழக்கம்போல் மலைக்கு செல்ல சென்னை, கோவை,மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்தனர். மலைகளில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர் கரைபுரண்டு ஓடுவதாலும், திடீர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கு செல்ல யாரையும் வனத்துறையினர், காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் அவர்களுடன் வாக்குவாதம் செய்தபடி இருந்தனர். முடிவில் அடிவாரத்திலேயே சூடம் ஏற்றி வழிபட்டு ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.