பழநி: பழநி மலைக்கோயிலில் பக்தர்களின் சரண கோஷத்துடன் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பழநியில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியகார்த்திகையைமுன்னிட்டு பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர் தீபாராதனையும், 5.30மணி நடக்கும் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடந்தது. தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி உலாவந்தார். யாகசாலையில் மகா தீபாரதனை நடந்தது. அதன்பின் தீபஸ்தம்பம் அருகேயுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். மூலவர் ஞானதண்டாயுதபாணி சன்னதியில் இருந்து பரணி தீபம் எடுத்துவரப்பட்டு உட்பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6.15மணிக்கு மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
பக்தர்கள் "வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா, பழநியாண்டவருக்கு அரோகரா என சரணகோஷங்களை எழுப்பினர். கூட்டத்தை கட்டுப்படுத்த மாலை 4 மணிக்குமேல் பக்தர்கள் மலைமேல் வர அனுமதிக்கப்படவில்லை. திருஆவினனன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. படிப்பாதை , திருஆவினன்குடிகோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்தனர்.
பக்தர்கள் காத்திருப்பு: "ரோப்கார் வின்ச் ஸ்டேஷனில் மட்டும் பக்தர்கள் 2 மணி மணிநேரம் வரை காத்திருந்து, மலைக்கோயிலுக்கு சென்றனர். காலையில் சென்ற பக்தர்கள் மாலையில் ஏற்றப்படும் கார்த்திகைத் தீபத்தை காண்பதற்காக, மலையிலேயே தங்கிவிட்டனர். இதனால் மலைக்கோயில் வெளிப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். பொதுதரிசன வழியில் 3மணி நேரம் வரை காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.