பதிவு செய்த நாள்
26
நவ
2015
10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, நேற்று காலை தேரோட்டமும், மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க அங்கி அலங்காரத்தில், 16கால் மண்டபம் அருகே அலங்கரிக்கப்பட்ட சிறிய வைரத் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது.
கார்த்திகை தீபம்: கோயிலுக்குள் அனுக்ஞை விநாயகர் முன் மாலை 5 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதே நேரம் மலை மீது தீப மண்டபம் அருகிலுள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு கும்பங்களில் புனிதநீர் நிரப்பி, விநாயகர் பூஜை, அக்னிலிங்க பூஜை, வர்ணபூஜைகள், தீபாராதனைகள் முடிந்து, தீப கொப்பரையில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது. கோயில் மணி அடிக்கப்பட்டதும், மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. சொக்கப்பனை ஏற்றப்பட்டது.