மேலுார்: மேலுார் அருகே நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் மண்ணை மலையாக்கும் திருக்கார்த்திகை திருவிழா நேற்று நடந்தது. இம்மலையடிவார கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அருகிலுள்ள ஒடையில் இருந்து மணலை ஒரு கைபிடி எடுத்து வந்த பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசி வழிபட்டனர். மணலுடன், உப்பு, மிளகு சேர்த்து வீசினால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீசப்பட்ட கைப்பிடி மண் படிப்படியாக சிறு மலையாக மாறியது. இரவு பெருமாள் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. மேலவளவு அருகிலுள்ள கருப்பு கோயிலில், பக்தர்கள் கற்களை வீசி வழிபடுவது வழக்கம். மலை மீது ஏறும் பக்தர்கள், அங்கிருந்து கீழ் நோக்கி கற்களை எறிவர். செங்குத்தான மலை மீது ஏறி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.