பதிவு செய்த நாள்
26
நவ
2015
11:11
கோவை : மருதமலை முருகன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உட்பட கோவையில் உள்ள முக்கியக்கோவில்களில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மருதமலை: முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலில், நேற்று கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், காலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. மதியம் உச்சிகால பூஜை செய்யப்பட்டு, முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்வான திருவிளக்கேற்றும் நிகழ்ச்சி மாலை, 5:30 மணிக்கு துவங்கியது. முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபக்கம்பத்தில், 6:00 மணிக்கு மகா தீப விளக்கு ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
குறிச்சி குளத்தில் தீபம்: குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில், குளத்தில் விழிப்புணர்வு தீபம் ஏற்றப்பட்டது. குறிச்சி குளத்தில் நீர் நிரம்பினால், ௨௫ கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். குளத்தில் கழிவுநீர் வருவதை தடுக்கவும், நீரில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும் வலியுறுத்தி, நேற்று மாலை, குளத்தினுள் விழிப்புணர்வு தீபம் ஏற்றப்பட்டது. அமைப்பின் துணைத்தலைவர் செல்வ ராஜ், செயலாளர்கள் கனகராஜ், சுரேஷ்குமார், அமைப்பாளர் மணிகண்டன் உள்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்: நேற்று மாலை, 5:00 மணிக்கு சாயரட்சை பூஜை முடிந்ததும், பட்டீஸ்வரர் மற்றும் பச்சை நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின், இருவர் முன்னிலையிலும், கோவில் வாசலில் உள்ள கம்பத்தில் மகா தீபம் விளக்கேற்றப்பட்டது. கோவில் கோபுரம் முதல், துாண்கள் வரை அனைத்தும் விளக்கொளியில் ஜொலிதத்தன.
தர்மலிங்கேஸ்வரர் கோவில்: மதுக்கரை, மரப்பாலம் அருகேயுள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், தீப விழா நேற்று காலை, ௭:௩௦ மணிக்கு ஒன்பது லிங்கங்களுக்கு பூஜையுடன் துவங்கியது. ௬:௩௦ மணிக்கு, மதுக்கரை ஊர்கவுண்டர் முருகேசன், தீபத்தை ஏற்றி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், ஈச்சனாரி விநாயகர் கோவில், சின்ன தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவில், வெள்ளியங்கிரி மலை ஆகிய இடங்களிலும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது.
மாதேஸ்வரர் மலை: மேட்டுப்பாளையம் -- காரமடை ரோட்டின் அருகே குட்டையூரில் மாதேஸ்வரர் மலைக்கோவிலில், கார்த்திகை தீப விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மலை உச்சியில் அமைத்த பெரிய கொப்பறையில், நெய்யை ஊற்றி, காடா துணியில் திரி அமைக்கப்பட்டது. கோவில் பூசாரி மாலை, 6:00 மணிக்கு கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து நான்கு பக்கம் தீபாராதனை காண்பித்த பிறகு மகாதீபம் ஏற்றினார். கார்த்திகை தீபம் சுடர் விட்டு எரிந்தது. மலை மீது நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் கார்த்திகை தீபத்தை வழிபட்டனர். மாதேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழா ஏற்பாடு களையும், பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளையும், ஓம் நமச்சிவாய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.