பதிவு செய்த நாள்
26
நவ
2015
11:11
தேனி:தேனி மாவட்டம் முழுவதும் உள்ள 16 கோயில்களில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி, வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று கார்த்திகை தீபத்திருநாள் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை முதலே அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். தேவதானப்பட்டி முருகமலை சுப்பிரமணியசாமி கோயில், பெரியகுளம் பால சுப்பிரமணிய சாமி கோயில், கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயில், போடி பரமசிவம் கோயில், மல்லகேசுவரர் கோயில், கம்பம் சுப்பிரமணியசாமி கோயில், தேவாரம் பொன்குன்றம் மலைக்கோயில், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலைக்கோயில், தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில், தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில், தேனி வேல்முருகன் கோயில் உட்பட மாவட்டத்தில் 16 கோயில்களில் நேற்று மாலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வழிபட்டனர். நெரிசல் மற்றும் திருட்டுக்களை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
போடி: தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோயிலில் தக்கார் பாலகிருஷ்ணன் தலைமையில் விழா நடந்தது. சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவை தலைவர் ஜெயராமன், செயலாளர் குமார், துணைத்தலைவர் குமார், குருசாமி சுருளிவேல் முன்னிலை வகித்தனர். நகரில் இருந்து பார்த்தால் ஜோதி தெரியும் படி,"அரோகரா கோஷத்துடன் மலைக்கோயிலை சுற்றி கிரிவலமாக சென்று மலைக்கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீப ஆராதனைகளை சுந்தரம் குருக்கள் செய்தார். முருகன், லட்சுமி நாராயணனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவாரம்: தேவாரம் அருகே பொன்குன்றம் மலையில் உள்ள முருகன் கோயிலில் நடந்த திருக்கார்த்திகை திருவிழாவிற்கு தெய்வீக பேரவை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பா.ஜ., விவசாய அணித்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அவனாசி ஈஸ்வரர் கோயிலிலிருந்து பரணி தீபம் ஏற்றப்பட்டு, ஊர்வலமாக அரங்கநாதர் கோயிலுக்கும், அங்கிருந்து மெல்லோட்டமாக பொன்குன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
மலையடிவாரத்தில் உள்ள தீபத்தூணிற்கு 20 குடங்களில் கொண்டுவரப்பட்ட பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. தேவாரத்தை சுற்றியுள்ள 15 கிராம மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கம்பம்: சுருளி அருவியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிவனடியார் முருகன் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினார். முன்னதாக மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இங்குள்ள பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில்களிலும் தீபத் திருவிழா நடைபெற்றது. பெரியகுளம் அருகே கைலாசபட்டி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோயிலில் ராஜா பட்டர் தலைமையில் பாலதீபம் ஏற்றப்பட்டது. அதன்பின்னர்,300 கிலோ நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர் விஜயராணி, சிவக்குமார், தெய்வேந்திரன், பாண்டி உட்பட ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.
மூணாறு: மூணாறு சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடந்தவிழாவிற்காக,பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்து வந்தனர். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 6.15 மணியளவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இரவில் முருகன், வள்ளி,தெய்வானையுடன் சப்பரத்தில் நகர் வலம் நடந்தது. சண்முகநாதன் தலைமையிலான பழனி பாதயாத்திரை குழு சார்பில் நேற்று 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.