பதிவு செய்த நாள்
26
நவ
2015
06:11
கோவை: ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவில் அமைக்கப்படும், வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் பிரம்மாண்ட சிலையின் பெரிய திருவடி கோவைக்கு வீதி உலாவாக கொண்டுவரப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஆர்ய வைஷ்யர்களின் குலதெய்வமாக விளங்குவது, கன்னிகாபரமேஸ்வரி அம்மன். ஆந்திராவிலுள்ள, மேற்கு கோதாவரி மாவட்டம், பெனுகொண்டா நகரில், 90 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமான அளவில் பஞ்சலோகத்தில், வாசவி கன்னிகாபரமேஸ்வரி சிலை, பஞ்சலோகத்தில் செய்து பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக அகில பாரத ஸ்ரீ வாசவி பெனுகொண்டா அமைப்பு சார்பில், தங்கம், வெள்ளி, துத்தநாகம், செம்பு, பித்தளை உள்ளிட்ட பஞ்ச லோகங்களால், 40 டன் எடையில், 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை உருவாக்கப்படுகிறது. இச்சிலை 2017 ம் ஆண்டு, பெனுகொண்டாவில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. முன்னதாக, தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த அந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளது.
அதன் படி முதற்கட்டமாக, அம்மனின் பெரிய திருவடி கோவைக்கு வந்தடைந்தது.
பெரிய திருவடிக்கு, ஆர்ய வைஷ்ய மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். 7 ,அடி உயரமும், 5, அடி அகலமும் ஒன்னரை டன் எடை கொண்ட அம்மனின் பெரிய திருவடி, பக்தர்களின் தரிசனத்துக்காக, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், வைசியாள் வீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு மேளதாளங்கள் முழங்க, வேதபாராயணம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, பெரியதிருவடிக்கு மரியாதை செய்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்பட்டனர். பெரிய திருவடி கோவையில் பக்தர்கள் தரிசனத்துக்காக பத்து நாட்கள் வைக்கப்படும். காலை நேரங்களில், கோவையின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா அழைத்துச்செல்லப்படும். அதன் பின்பு வைசியாள் வீதியிலுள்ள, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலின் எதிரிலுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருக்கும். பத்து நாட்களுக்கு பிறகு, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று, அமைப்பு நிர்வாகிகள் கோவிந்தராஜூலு, தல்லம் சீனிவாசன் ஆகியோர் கூறினர்.