பதிவு செய்த நாள்
27
நவ
2015
11:11
பழநி,: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, பாலாறு-பொருந்தலாறு அணையிருந்து நேரடியாக ரூ.10 கோடி செலவில் குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது. தமிழகத்தின் முதன்மை ஆன்மிக, சுற்றுலா தலமாக பழநி உள்ளது. இங்கு விழாக் காலங்களில் தினமும் 50 ஆயிரமும், சாதாரண நாட்களில் 25ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பாலாறு- பொருந்தலாறு, கோடைகால நீர்த்தேக்கம் வழியாக நகரமக்கள், பக்தர்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு, குழாய்களில் உடைப்பு ஏற்படும்போதும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க முடிவதில்லை. இதைத் தவிர்க்க பாலாறு- பொருந்தலாறு அணையிலிருந்து நேரடியாக பழநி கோயிலுக்கு தண்ணீர் கொண்டுவர கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.10 கோடிவரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என, பொதுபணித்துறையிடம் கோயில் நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் பழநிகோயிலுக்கு வரும் பக்தர்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுபணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாலாறு -பொருந்தலாறு அணையில் ஆண்டுதோறும் 3 கனஅடி தண்ணீர் பழநிநகர குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. தற்போது கோயில்நிர்வாகம் மலைக்கோயில், தங்கும்விடுதிகளுக்காக அணையிலிருந்து தனிக்குழாய் மூலம் குடிநீர் கொண்டுவர திட்டமிட்டு தடையின்மைச்சான்று கேட்டுள்ளனர். உயர் அதிகாரிகளிடம் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்பட உள்ளது,”என்றார்.