பதிவு செய்த நாள்
27
நவ
2015
12:11
திருவான்மியூர்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குளத்தில், 25 ஆண்டுகளுக்கு பின், தற்போது பெய்த மழையில், 10 அடி நீர் நிரம்பியதை பக்தர்கள், பகுதிவாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பக்குளம் வறண்டு பல ஆண்டுகளாகி விட்டன. எப்போதும் அதில் சிறிது தண்ணீர் தேங்கி நிற்கும். குளம், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல், நான்குபுறம் தடுப்பு சுவர் மற்றும் இரும்பு வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன், மழைநீர் சேகரிப்பு மையமாக, குளம் மாற்றப்பட்டது. குளத்தின் நான்கு பக்கங்களிலும், குழாய் அமைத்து, சுற்றுவட்டாரத்தில் சேகரமாகும் மழைநீர், குளத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. வடிகால் ஆக்கிரமிப்பு, அடைப்பு, சேதம், தொடர் பராமரிப்பின்மை போன்ற காரணங்களால், மழைநீர் குளத்தை நிரப்புவதில்லை. கடந்த 25 ஆண்டுகளில், மழையால் குளத்தில் அரை அடி நீர் கூட நிரம்பவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில், குளத்தில் 10 அடி நீர் நிரம்பி உள்ளது. குளத்தில், தேளி இன பெரிய மீன்கள் உள்ளன. நீரில் வாத்துகள் உலாவுகின்றன.
இதனை பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக இருந்திருந்தால், குளம் நிரம்பி இருக்கும். கோவில் அருகே, துணி இஸ்திரி போடும், கடை நடத்தி வரும் வேல்முருகன், 59, கூறியதாவது: நான், 24 ஆண்டுகளாக இங்கு கடை நடத்தி வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும், மழை பொழியும்போது, ஒரு படியாவது நீரில் மூழ்காதா என, ஏங்கி இருக்கிறேன். மழைக் காலத்தில், படியை பார்த்து விட்டுத் தான், கடை திறப்பேன். அந்த அளவு குளத்தில் தண்ணீர் நிரம்புவதை பார்க்க ஆர்வமாக இருந்தேன். தற்போது இந்த மழையில், குளத்தில், ௧௦ அடி உயரத்திற்கு நீர் நிரம்பியதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழையின் போதும், குளம் நிரம்ப வேண்டும் என்பது தான் என் ஆசை இவ்வாறு அவர் கூறினார்.