பதிவு செய்த நாள்
01
டிச
2015
10:12
சபரிமலை: மாளிகைப்புறம் கோயிலில் மஞ்சளை தூவியும், துணிகளை வீசியும், பன்னீரை தெளித்தும் ஆசாரங்களை மீறக்கூடாது என்று பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் இருமுடி கட்டில் ஒரு முடியில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் தேங்காய் மற்றும் பச்சரிசி போன்ற பொருட்கள் இருக்கும். இரண்டாவது முடியில் அவல், பொரி, மஞ்சள், குங்குமம், திருநீறு, பன்னீர் போன்ற பொருட்கள் இருக்கும். பக்தர்கள் மஞ்சள் பொடியை மாளிகைப்புறத்தம்மன் கோயில் பகுதியிலும், அதன் பின்னால் இருக்கும் நாகர் பிரதிஷ்டைகளிலும் தூவுகின்றனர். குங்குமத்தை நவக்கிரக மண்டபத்தை சுற்றி தூவுகின்றனர். இவ்வாறு செய்வது ஆசாரங்களுக்கு எதிரானது.
மாளிகைப்புறத்தம்மனுக்கு கொண்டு வரும் பொருட்களை தேவிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இங்கு மஞ்சள், குங்குமம், திருநீறு போன்றவற்றை தூவுவது, கோபுரத்தின் மீது கொண்டு வரும் புது பிளவுஸ் துணிகளை வீசுவது போன்றவை ஆசாரங்களுக்கு எதிரானது. இவற்றை பக்தர்கள் தேவிக்கு சமர்ப்பணம் செய்தால் அதை தந்திரியோ, மேல்சாந்தியோ தேவிக்கு அபிஷேகம் செய்வார்கள்.ஆடைகளை கோயிலில் சமர்ப்பித்தால் போதுமானது. ஸ்ரீகோயிலின் மேல்பகுதியில் தொடக்கூடாது என்பதை கூட பக்தர்கள் தெரியாமல் நடந்து கொள்கின்றனர். பக்தர்கள் இது போன்ற செயல்களை தவிர்த்து கோயில் ஆசாரங்களை தெரிந்து நடக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.