பதிவு செய்த நாள்
01
டிச
2015
11:12
அஹமது நகர்:மஹாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் உள்ள கோவிலில், பெண் ஒருவர் நுழைந்து பூஜை செய்ததால் களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, சனி பகவான் சிலையை கழுவி, பரிகாரம் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இம்மாநிலத்தின் அஹமது நகர் மாவட்டத்தில், 4,000 பேர் வசிக்கும் கிராமம், சிங்னாபூர்; இங்கு, புகழ்பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது.
தண்டிப்பார்: இக்கிராமத்தில் உள்ள வீடுகளில் கதவுகள் இருக்காது; நுழைவாயிலில் வாசக்கால் சட்டம் மட்டுமே இருக்கும்; இங்குள்ள காவல் நிலையத்துக்கும் கதவுகள் கிடையாது. திருடு, கொள்ளையில் ஈடுபடுவோரை, சனி பகவான் கடுமையாக தண்டிப்பார் என, இப்பகுதி மக்கள் உறுதியாக நம்புவதே இதற்கு காரணம். இங்குள்ள சனி பகவான் கோவிலில், பெண்கள் யாரும் நுழையக் கூடாது என்ற விதிமுறை, நீண்ட நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இரு நாட்களுக்கு முன், சனி பகவானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.அப்போது, பெண் ஒருவர், தடுப்புகளை தாண்டி கோவில் கருவறைக்குள் நுழைந்து, சனி பகவானுக்கு பூஜை செய்தார்.
பாலாபிஷேகம்: அங்கிருந்த பக்தர்கள் சுதாரிக்கும் முன், கோவிலில் இருந்து அப்பெண் வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது. பெண் பூஜை செய்ததால் களங்கம் ஏற்பட்டதாக கருதிய கோவில் நிர்வாகம், சனி பகவான் சிலையை கழுவி சுத்தம் செய்து, பாலாபிஷேகம் செய்தது. கோவில் அறக்கட்டளை தலைவர் சாய்ராம் பங்கர் கூறுகையில், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், சனி பகவான் சிலையை கழுவி, பாலாபிஷேகம் செய்து
பரிகாரம் செய்தோம்; இதில் தவறில்லை, என்றார். கோவில் உள்ள பகுதியைச் சேர்ந்த பல பெண்களும், சனி பகவானுக்கு, பெண் பூஜை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர், டிவியில் கருத்து கூறினர். இதற்கிடையில், கோவிலில் நுழைந்து பூஜை செய்த பெண்ணுக்கு, அரசியல் தலைவர்களும் பகுத்தறிவுவாதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முடிவு செய்ய நாம் யார்?: கடவுள், அனைவரையும் சமமாகவே படைத்தார். கடவுளுக்கு, இப்படித் தான் பூஜை செய்ய வேண்டும் என்றோ, யார் பூஜை செய்ய தகுதி பெற்றவர் என்றோ முடிவு செய்ய நாம் யார்? ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருந்தால், கோவிலுக்குள் வரக் கூடாது என, எந்த கடவுளும் சொல்லவில்லை. சந்திரா அய்யங்கார் உள்துறை முன்னாள் கூடுதல் செயலர் - மஹாராஷ்டிரா
பத்தாம் பசலித்தனம்: ஒரு பெண் நுழைந்ததால், கோவில் களங்கமாகி விட்டதா என்பதை, நிபுணர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். பெண் பூஜை செய்ததால், களங்கமாகி விட்டதாகக் கூறி பரிகாரம் செய்தவர்கள், அக்கோவிலின் பராமரிப்பாளர்கள் மட்டுமே. அப்பெண்ணை, கோவிலுக்குள் நுழையக் கூடாதென தடுக்க, அவர்களுக்கு உரிமை கிடையாது. பத்தாம் பசலித்தனமான இதுபோன்ற கட்டுப்பாடுகள், 500 ஆண்டுகளுக்கு முன் உருவானவை.
நிர்மலா சமந்த் பிரபாவல்கர் தேசிய பெண்கள் கமிஷன் முன்னாள் உறுப்பினர்.