மதுரை: மதுரை திருவாதவூர் அருகே ஆமூரில், இடிந்து விழுந்த கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அய்யம் பொழில் ஈஸ்வரர் கோயிலை ரூ.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. மீனாட்சி கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள இக்கோயிலை, பாண்டிய மன்னர்கள் குலசேகரபாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆதரவுடன் வணிகர்கள் எழுப்பினர். பல்லவ சிற்றரசர்களில் சிலர் அரசுரிமை இழந்த பின், பிற்கால பாண்டியர் ஆட்சியில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் ’காடுவெட்டி’ என அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இக்கோயில் கோபுர வாசலை உருவாக்கியதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். முன்பு இக்கோயிலில் சுவாமி சன்னதி மட்டும் இருந்தது. தற்போது அம்மன் சன்னதியும் அமைக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் மேல்தளங்களை புனரமைத்து வரும் பண்ருட்டி ஸ்தபதி குமரன் சார்பில், இக்கோயிலின் சுதைகளை செதுக்கும் பணியில், துணை ஸ்தபதி திருமயம் முத்து தலைமையில் 10 பேர் மூன்று மாதமாக ஈடுபட்டுள்ளனர். முத்து கூறியதாவது: இரண்டு மாதங்களில் இப்பணி முடியும். சுவாமி சன்னதி முன்பு 26 அடி நீளம், 26 அடி அகலத்தில் மண்டபம் அமைக்கும் பணி நடக்கிறது. சுதைகள் செதுக்கி முடிந்ததும் உடனுக்குடன் பொருத்துகிறோம், என்றார். மேலும் விபரங்களுக்கு பூஜாரி செந்தில்குமாரை(98947 33220) தொடர்பு கொள்ளலாம்.