சபரிமலை: மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் தோஷங்கள் தீர்ப்பதற்காக நடத்தப்படும் உடுக்கு கொட்டு வழிபாட்டில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்கின்றனர். சபரிமலை வரும் பக்தர்கள் 18ம் படியேறி ஐயப்பனை தரிசித்த பின்னர், மாளிகைப்புறத்தம்மன் கோயில் வழிபாடு நடத்துவது வழக்கம். இங்கு நாகர் சிலைகளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும், நவக்கிரகங்களை சுற்றி வந்தும் வழிபடும் பக்தர்கள் தங்கள் சனிதோஷம், சத்ருதோஷம் போன்றவற்றை களைய உடுக்கு கொட்டி பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். பாற்கடலை கடைந்த பின்னர் விஷ்ணுபகவானுக்கு ஏற்பட்ட சனிதோஷத்தை பரமசிவன் மலைவேலன் வேடத்தில் வந்து உடுக்கு கொட்டி பாடி களைந்த வரலாற்றை நினைவு கூரும் வகையில், இந்த உடுக்கு கொட்டி பாட்டு நடைபெறுகிறது. ஆரன்முளாவை சேர்ந்த மலைவேலன் சமுதாயத்தினர் இந்த சடங்கை நடத்துகின்றனர். மாலையணிந்து வரும் பக்தர்களுக்காக உடுக்கு கொட்டி பாடி, தோஷங்களை அகற்றி அவர்களுக்கு திருநீறு அணிவித்து விடும் போது பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை இவர்களது வருமானமாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு உடுக்கு கொட்டி பாடி வருகின்றனர். காலையில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கும் வரை இவர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.