மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளியது திருவெம்பாவை; ஆண்டாள் ஸ்ரீவல்லிபுத்தூரில் அருளியது திருப்பாவை. திருவெம்பாவையில் 20 செஞ்சொற்சித்திரங்களும், திருப்பாவையில் 30 செஞ்சொற் சித்திரங்களும் ஒளிர்கின்றன. மாணிக்கவாசகர் திருவாதவூர் தந்த அருட்செல்வர்; பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர். ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் தந்த அருட்செல்வி; விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாரால் நந்தவனத் துளசிச் செடியருகே காணப்பட்ட அற்புதக் குழந்தை.
மன்னருக்காக குதிரைகள் வாங்கச் சென்று, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்றார் மாணிக்கவாசகர். குதிரைக்குரிய பணத்தில் அறச்செயல் புரிந்து அரசுப் பணியில் பிழைபட்டார். கோதையோ கடவுளுக்கான மாலையைத் தானே சூடி அழகு பார்த்தபின் கோயிலுக்குத் தந்து சமயாச்சாரத்தில் பிழைப்பட்டாள். மணிவாசகரை சிவபிரான் ஆட்கொண்டார்; சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார். இருவருமே இறைஒளியில் கலந்தபெருமையினர்; மேலும் இறை ஒளியைத் தம்தம் அழகிய பாடல்கள் வழங்கிய அற்புதமான திவ்ய ஞானதீபங்கள்.
திருவாசகத்தின் அங்கமாகப் பன்னிரு திருமுறையில் குடியேறியது திருவெம்பாவை; நாச்சியார் திருமொழியுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை. பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழகத்தின் ஆன்மிகப் பண்பாட்டு விழிகள். பாவைப் பாட்டுகளோ அந்த இரு விழிகளை பாவைகளாக ஒளிர்பவை.