பதிவு செய்த நாள்
07
ஜன
2016
10:01
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில், உத்தராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபம், ஆடிப்பூரம், உத்தராயண புண்ணிய கால உற்சவம், தட்சிணாயன புண்ணிய கால உற்சவம் ஆகிய திருவிழாக்களின் போது, கொடியேற்றம் நடைபெறும். இந்நிலையில், நேற்று மார்கழி மாதத்தில் நடக்கும் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர், தங்க கொடி மரத்தின் முன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து, காலை, 6.30 மணிக்கு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, கொடியேற்றம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவத்தில், மார்கழி மாதம் முடியும் வரை, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், சுவாமி மாட வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.