சபரிமலை: சபரிமலையில் வரும் 15-ம் தேதி அதிகாலை 1.27 மணிக்கு மகர சங்கரம பூஜையும், மாலை 6.35 மணிக்கு மகரஜோதி விழா நடக்கிறது. சபரிமலையில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகரவிளக்கு காலத்தில் பெரும்பாலான பக்தர்களும் எருமேலியில் பேட்டை துள்ளி பெருவழிப்பாதை வழியாக பம்பை வருகின்றனர். இதனால் பத்தணந்திட்டை-சாலக்கயம் வழியாக பம்பை வரும் ரோட்டில் வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. எருமேலியில் பேட்டை துள்ளும் பக்தர்கள் அழுதை, கரிமலை, வலியானவட்டம் வழியாக பம்பை வருகின்றனர். பம்பை வந்த பின்னர் இவர்கள் பம்பையில் உணவு சமைத்து விருந்து உண்ட பின்னர் நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் பக்தர்கள் ஐந்து மணி நேரம் வரை கியூவில் நின்றுதான் 18--ம் படியேற வேண்டியுள்ளது. வரும் 15-ம் தேதி மகரஜோதி விழா நடக்கிறது. பந்தளத்தில் இருந்து வரும் திருவாபரணங்கள் அன்று மாலை 6.25 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரம் வானில் ஒளிவிட்டு பிரகாசிக்கும். தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சி தரும். மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு நடைபெறும் முக்கியமான பூஜை மகர சங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் முக்கிய பூஜையாகும். இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து சிறப்பு துாதர் மூலம் கொடுத்து அனுப்பப்படும் நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு நேரடியாக அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு இந்த பூஜை 15-ம் தேதி அதிகாலை 1.27 மணிக்கு நடைபெறுகிறது.