பதிவு செய்த நாள்
07
ஜன
2016
10:01
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி கிராமத்தில் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டிய ராஜேந்திர சோழன் கட்டிய பேசும் சிவபெருமான் கோவில் பராமரிப்பின்றி பாழடைந்து சிற்பங்கள், சிலைகள் சேதமடைந்து வருகிறது. காட்டுமன்னார் கோவில் தாலுகா சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி கிராமத்தில் 110 ஏக்கர் நிலத்திற்கு சொந்தமான பேசும்பெருமான் கோவில் புதர்மண்டி சிற்பங்கள், சிலைகள் பாழடைந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஏரி வெட்டி மக்கள் விவசாயம், கால்நடைகள் செழிப்பாக இருக்க சோழ வம்சத்தில் வந்த ராஜேந்திர சோழன் வீராணம் ஏரியை ஆழப்படுத்தினார். ஏரியை வெட்டுவதற்காக வீராணம் ஏரி மேற்கு கரையில் கூடாரம் அமைத்து தனது படை பரிவாரங்களுடன் தங்கியிருந்தார். அப்போது பெரிய நந்தி, பிரம்மாண்டமான 15 அடி உயரத்தில் யானை, 10 அடி உயரத்தில் குதிரை சிலைகள் அமைக்கப்பட்டு பேசும் சிவபெருமான் கோவில் உருவாக்கப்பட்டது.
இக்கோவில் நாளடைவில் வானமாதேவி கிராமத்தில் உள்ள பரம்பரை அறங்காவலர்கள் பராமரித்து வந்ததாகவும், அதன் பிறகு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு கோவில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்த கோவில் பராமரிப்பின்றி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூஜைகள் நடத்தப்படாமல் புதர்கள் மண்டியுள்ளது. ஆனால், இன்னமும், பண்ருட்டி, காடாம்புலியூர், காடுவெட்டி, ஜெயங்கொண்டம், அரியலுார், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதியில் உள்ள சிலர் குலதெய்வங்களாக இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். பூஜைகள் நடைபெறாத நிலையில் இந்தக் கிராமத்தின் வளங்கள் படிப்படியாக குறைந்து வருவதாக கிராம மக்கள் கருதுகின்றனர். அறநிலையத்துறையினர் இந்தக் கோவிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு பூஜைகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.