பதிவு செய்த நாள்
05
பிப்
2016
10:02
கோபி: கோபி அருகே கரிய காளியம்மன் கோவிலில் பக்தர்கள் நேற்று காலை குண்டம் இறங்கினர். கோபி வெள்ளாங்கோயில் அருகே கோரக்காட்டூர் கிராமத்தில், பழமை வாய்ந்த கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா, கடந்த ஜன.,20ல் பூச்சாட்டுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை, 6 மணிக்கு நடந்தது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த, 32 அடி குண்டத்தில் தலைமை பூசாரி இறங்கியதை தொடர்ந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கோரக்காட்டூர், வெள்ளாங்கோயில், ஐய்யன்புதூர், கடுக்காம்பாளையம், குட்டியாக்கவுண்டன்புதூர், சின்னபெருமாள் கவுண்டன்புதூர், காளிசெட்டிபாளையம், குஞ்சரமடை ஆகிய ஊர்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குண்டம் இறங்கினர்.