பதிவு செய்த நாள்
05
பிப்
2016
11:02
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. கடந்த ஜன., 27 ந்தேதி இக் கோயிலில் கொடியேற்றப்பட்டது. தினசரி குழந்தை பல்வேறு வாகனங்களில் சென்று, மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு தீர்த்தக்காவடி, அலங்கார காவடி, அலகு குத்தும் காவடி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.தேரோட்டம்: தேரோட்ட தினமான நேற்று குழந்தை வேலப்பர் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவ மூர்த்தி வள்ளி, தெய்வானையுடன் தேரில் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
பகல் 3 மணியளவில் சிதறுதேங்காய் உடைத்து, தேர்பவனி துவங்கியது. களிமண் திட்டு பகுதியில் பக்தர்கள் படி உருளுதல், அடி அளந்து சாமி கும்பிடுதல், அங்க பிரதட்சணம், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர். சிதறு தேங்காய், வாழைப்பழம் சூறையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. பின் தண்ணீர் கரை பகுதியில் உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. நாளைய நிகழ்ச்சியில் குழந்தை வேலப்பரை குதிரை வாகனத்தில் பவனியாக கவை என்ற இடத்திற்கு கொண்டு சென்று ஆராதனை செய்து, பழநிக்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாம் நாள் குழந்தை வேலப்பருக்கு ஆபரணங்கள் கழித்தல் நிகழ்ச்சியுடன், வழக்கமான பூஜைகள் நடைபெறும்.