பதிவு செய்த நாள்
05
பிப்
2016
11:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்., 8, 22ல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.இந்தாண்டு தை அமாவாசை, மகோதய புண்ணிய காலமாக வருவதால் இக்கோயிலில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, சப்பரங்களில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தர தேவர் புறப்பாடாகி சரவணப் பொய்கையில் எழுந்தருள்வர். அங்கு யாகம், பூஜை முடிந்து அஸ்தர தேவருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி, தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா வருவர்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தன்று மட்டுமே பஞ்ச மூர்த்திகள் சரவணப்பொய்கையில் எழுந்தருள்வது வழக்கம். இந்தாண்டு விஷேச அமாவாசை வருவதால் அன்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஒரே மாதத்தில் இரு முறை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு சிறப்பாகும்.