பதிவு செய்த நாள்
06
பிப்
2016
10:02
தமிழகம் முழுவதும், 30 ஆண்டுகளுக்கு பின், சிவன் கோவில்களில் அபூர்வ சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிவன் கோவில்களில், சனிப்பிரதோஷ வழிபாடு முக்கியமானது. மாலை, 4:30 - 6:00 மணிக்குள் சிவபெருமான் முன், ஆன்மாவின் ரூபமாக விளங்கும், நந்தி பகவானுக்கு நடைபெறும் வழிபாடு தான், பிரதோஷ வழிபாடு என்றழைக்கப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் அமுதத்தை உண்பதற்காக, வாசுகி என்ற பாம்பை மத்தாக்கி, திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில்இருந்து அமுதம் திரண்டுவரும் முன் ஆலகால விஷம் தோன்றியது.
இதைக் கண்டு, தேவர்களும், அசுரர்களும் அஞ்சி நடுங்கினர். அப்போது, சிவபெருமான் தோன்றி, ஆலகால விஷத்தை உண்டு, தேவர்களையும், அசுரர்களையும் காப்பாற்றினார்.மேலும், தன் வாகனமான நந்தியின் கொம்புகளுக்கு இடையே, ஆனந்த நடனமாடி அனைவருக்கும் காட்சியளித்தார். சிவன் ஆனந்த நடனமாடிய நேரமே, பிரதோஷ வழிபாடாக கோவில்களில் கடைபிடிக்கப்படுகிறது.சனிக்கிழமை தேய்பிறை திரியோதசி நாளில் தான், சிவபெருமான் ஆலகால விஷம் உண்டு, பக்தர்களை காப்பாற்றினார் என்று சொல்லப்படுவதால், இந்த நாளில் பக்தர்கள் பிரதோஷ வழிபாடு நடத்துகின்றனர். அந்த வகையில், தை மாத தேய்பிறை பிரதோஷம், இன்று சனிக்கிழமை வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சனி மகாபிரதோஷ வழிபாடு, இன்று மாலை, 4:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் நடக்கிறது. இது குறித்து, தி.மலை சிவாச்சாரியார் சுப்பிரமணிய பட்டர் கூறியதாவது:சூரியன் வடக்கு நோக்கி நகரும் புண்ணிய காலமான தை மாதத்தில், அமாவாசை, திருவோண நட்சத்திரம், திங்கள் கிழமை, வியதியபாத திதி ஆகியவை இணைந்து வருகின்றன. இந்த அபூர்வ நாள், 30 ஆண்டுகள் கழித்து வருவதால், மிகவும் புனித நாளாகக் கருதப்படுகிறது.இந்த நாளுக்கு முன்னதாக வரும், சனி மகா பிரதோஷம் புனித மாகக் கருதப்படுவதால், சிவன் கோவில்களில் பிரதோஷ நேரத்தில் வழிபடுவது சிறப்பு, என்றார்.