வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பிரசித்திபெற்ற தை அமாவாசை திருவிழா, சனிப்பிரதோஷ வழிபாட்டுடன் துவங்குகிறது. இதற்காக இன்று காலை 6 மணிக்கு மலையின் நுளைவாயில் திறந்துவிடப்பட்டு பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சதுரகிரி மலையில் அருள்புரியும் சுந்தரமகாலிங்கசுவாமி தன்னை வணங்கிய 18 சித்தர்களுக்கும் ஆடி அமாவாசை தினத்தன்றுதான் காட்சி கொடுத்தார். அதன்காரணமாக அது பிரதான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அன்று இறைவனை காணாமுடியாத மற்ற சித்தர்கள் மீண்டும் இறைவனை காட்சிகொடுக்க வேண்டி தவமிருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இறங்கிவந்து இறைவன் மீண்டும் காட்சி கொடுத்தது இந்த தை அமாவாசை தினத்தில்தான். அதனால்தான் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வரமுடியாத பக்தர்களும், தரிசனம் செய்த பக்தர்களும் இந்த தை அமாவாசை திருவிழாவில் மீண்டும் கலந்து கொண்டு வழிபடுகிறார்கள். இதனால் தை அமாவாசை முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு புராணகாலத்து சிறப்புகள் கொண்ட இத்திருவிழா இன்று மாலை 4 மணிக்கு சனிப்பிரதோஷ வழிபாட்டுடன் கோலாகலமாக துவங்குகிறது. சனிப்பிரதோஷத்துடன் இன்று மாத சிவராத்திரி தினமும் சேர்ந்து வருவதால் பிரதோஷ பூஜைகள் முடிந்த பின் மாலை 6.30 மணிமுதல் சிவராத்திரி பூஜைகள் துவங்குகிறது. மறுநாள் பிப்.7 ல், திருவோண விரத வழிபாடும் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. பிப்.8 ல் காலைமுதல் தை அமாவாசை பூஜைகள் துவங்கி மாலைவரை நடக்கிறது. இதையொட்டி சுந்தரமகாலிங்கசுவாமிக்கு நாகாபரண அலங்காரமும், சந்தனமகாலிங்க சுவாமிக்கு சந்தனக்காப்புடன் ராஜஅலங்காரமும் செய்யப்படவுள்ளது. இது தவிர சுந்தரமூர்த்தி சுவாமி, பலாஅடி கருப்பசாமி, சந்தனமகாதேவிக்கும் தனித்தனியே அமாவாசை பூஜைகள் நடைபெறவுள்ளன. கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி, அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.