பதிவு செய்த நாள்
06
பிப்
2016
11:02
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழாவின், முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை, நேற்று நடந்தது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, கருடசேவை நேற்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு, கோபுர தரிசனம் முடிந்ததும், உற்சவர் வீரராகவர் அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். காலை, 7:00 மணிக்கு வீதியுலா புறப்பட்டு, ஈக்காடு சென்றார். அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளிய வீரராகவர், பின், 12:30 மணியளவில், அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் கோவிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 8ம் தேதி, தை அமாவாசை முன்னிட்டு, ரத்னாங்கி சேவையும், மறுநாள் 9ம் தேதி, தேரோட்டமும் நடைபெற உள்ளன. வரும் 12ம் தேதி வரை, பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.