திருக்கோஷ்டியூரில் மகாமகம் தெப்ப உற்சவம் ஏற்பாடு ஆலோசனை எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2016 11:02
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூரில் மகாமக தெப்ப உற்சவம் பிப்.,13ல் துவங்க உள்ள நிலையில் ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படாதது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப உற்சவம் 11 நாட்கள் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு மகாமகம் என்பதாலும், கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா நடைபெறுவதாலும், கூடுதலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் கழிப்பறை வசதி போதுமானதாக இருந்ததில்லை, கூடுதல் நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது, விளக்கேற்றும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அன்னதான கழிவு விரைவாக அகற்றப்படுவதில்லை போன்ற பல கவலைகளை பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் பக்தர்கள் அவதிக்குள்ளாவது தொடரும். பிப்.,13ல் காப்புக்கட்டி உற்சவம் துவங்க உள்ள நிலையில், அடிப்படை வசதி, பாதுகாப்பு,சுகாதாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இதுவரை நடத்தப்படாதது பக்தர்களுக்கு கவலையைத் தந்துள்ளது. கூடுதல்அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இந்த திருவிழாவை கண்காணித்து அதற்கான திட்டமிடல் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானது.